கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?

கோ பூஜை, கஜ பூஜை எதற்காக செய்யப்படுகிறது?

ஒரு தேயிலைத் தோட்ட முதலாளிக்கு தொழு நோய் வரத் துவங்கியது. அவர் தொழிலாளர்களின் வயிற்றில் அடித்தது, பிறன் மனை கவர்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டிருந்தார். அவருக்கு பரிகாரமாக, 5 பசுக்களை வாங்கி வீட்டில் பராமரித்து, அதில் இருந்து கறக்கும் பாலை ஏழை எளியவர்களுக்கு வழங்கு. மேலும் ஒரு காராம் பசு வாங்கி சிவன் கோயிலுக்கு தானமாகக் கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டது. பசுக்களை பராமரித்து, பசுவை தானமாகக் கொடுத்த பின்னர் தொழு நோய் கட்டுப்படுத்தப்பட்டது. அழுகத் துவங்கிய விரல்கள் வளரத் துவங்கின. அதுபோன்ற ஆற்றல் பசுவிற்கு உண்டு.
காராம் பசு என்றால் அதன் காம்புகள் மிகச் சிறியதாக இருக்கும். மற்ற பசுக்களிடம் இருந்து இவை வேறுபடும். எல்லா புல்லையும் உண்ணாமல் தேர்ந்தெடுத்து சில புற்களை மட்டுமே உண்ணும். அதன் பால் அதிக சுவையுடையதாக இருக்கும். அதிக சக்தி கொண்டதாகவும் இருக்கும். அந்தப் பாலுக்கும் பல மருத்துவக் குணங்கள் உண்டு. பழைய சிவாலயங்களில் எல்லாம் பார்த்தால், ஓரிடத்தில் சிவலிங்கம் புதைந்து கிடந்தது. அந்த இடத்தில் காராம்பசு பால் சொரிந்தது. அதைப் பார்த்த மேய்ப்பவன் ஊரில் போய் சொல்ல அங்கு தோண்டிப் பார்த்தால் சிவலிங்கம் இருப்பது தெரிய வந்தது போன்ற இதிகாசங்கள் இருக்கும்.
தேவ ரகசியங்களைக் கண்டுபிடிக்கும் ஆற்றலும் காராம்பசுவிற்கு உண்டு. தெய்வீக சக்தியை அறியும் ஆற்றல் படைத்ததால்தான் பசுவை கோமாதா என்றும் அழைக்கிறோம்.
எனவே எவ்வகையில் பார்த்தாலும் தெய்வீகத் தன்மை வாய்ந்த பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறந்த காரியம்.
அடுத்ததாக கஜ பூஜை!
இது மிகவும் வலிமையானது. பரிபாலன அதாவது அரசுக் கட்டிலில் அமருவதற்காக செய்யும் பூஜை. முதன்மை நாற்காலியில் உட்காருவதற்கான பூஜை. கஜகேசரி யோகம் என்று ஜாதகத்தில் ஒரு யோகம் சொல்லப்படுகிறது.
அதாவது ஜாதகத்தில் சந்திரனுக்கு நாலு, ஏழு, பத்தில் குரு உட்கார்ந்திருந்தால் கஜகேசரி யோகமாகும். இதுபோன்று அமைந்திருப்பவர்களுக்கு குரு தசையோ அல்லது சந்திர தசையோ நடந்தால் அப்போது அவர்கள் ராஜ யோகத்தை அடைவார்கள். நாட்டை ஆள்வார்கள். மற்ற கிரகங்களும் நன்றாக அமைந்தால் அரசையே ஆள்வார்கள்.
கஜகேசரி என்பது வெண்குற்றக் குடை தாங்கிய யானையின் மீது அமர்ந்து ராஜா வீதி உலா வருவார் அல்லவா அந்த யோகத்தை கஜ பூஜையின் மூலம் பெறலாம்.
அரசாட்சி புரிதல், அரசாலுதல், அரசு தொடர்பான வழக்கில் இருந்து விடுபடுதல் இதற்கெல்லாம் கஜ பூஜை துணையாக இருக்கும்.
ஒரு மடத்தில் துறவியாக இருந்தவர் கோ பூஜையைக் குறைத்து கஜ பூஜையை அதிகப்படுத்தினார். அப்போது பல மாநில முதலமைச்சர்கள் அந்த மடத்திற்கு வருவது அதிகரித்தது. எந்த முடிவு எடுப்பது என்றாலும் அந்த மடாதிபதியின் ஆலோசனையின்படிதான் நடந்தது. நீதிபதிகள், முதலமைச்சர்கள் என பலரது கார் அந்த மடத்தில்தான் இருந்தது.
ஆனால் இன்னார் இன்னார் இந்த இந்த பூஜை
¨யை இந்த அளவிற்குத்தான் செய்ய வேண்டும் என்று ஒரு வரையறை இருக்கிறது. ஆனால் ஒரு மடாதிபதியாக இருந்து கொண்டு கஜ பூஜையை அதிகளவில் செய்ததால் அதற்கான பின் விளைவுகளையும் அவர் சந்திக்க வேண்டி வந்தது.
துறவி ஒருவர் அரசனாக முடியாது. அவ்வாறு இருக்க கஜ பூஜையை அதிகளவில் செய்யும் போது அரசனால் ஆபத்தும் ஏற்படும். அரசுப் பழிக்குள்ளாதல், அரசுக்கு எதிராகுதல் போன்றவை ஏற்படும். தற்போது அவர் கொலை வழக்கில் சிக்குண்டு நீதிமன்றம், ஜெயில் என அலைந்து கொண்டிருக்கிறார்.
எனவே அவர் கஜ பூஜை செய்ததற்கு ஈடாக கோ பூஜையும் செய்திருந்தால் இந்த அளவிற்கு பழிக்கு ஆளாகியிருக்க மாட்டார்.
கோ பூஜை என்பது எல்லாவற்றிற்கும் நல்லது. அதனை செய்வதால் சிறந்த பலன்களை அடையலாம். தற்காப்புக்கும் கோ பூஜை சிறந்தது. கோவை அதாவது பசுவை தானமாக கொடுப்பதும் நல்லது.
ஆனால் கஜ பூஜையை மட்டும் பார்த்துத்தான் செய்ய வேண்டும். கஜ பூஜையை செய்துவிட்டு சும்மா அங்கேயே இருந்து விடக் கூடாது. கஜம் என்றால் ஆற்றல். ஆற்றலை வைத்துக் கொண்டு ஒரே இடத்தில் இருக்கக் கூடாது. கஜ பூஜை செய்துவிட்டு எல்லையைத் தாண்டி போய்விட்டு வர வேண்டும். கஜ பூஜை ஒரு ஆற்றலைத் தரும். அந்த ஆற்றலை வைத்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தால் வீட்டில் இருப்பவர்களை அடிக்க வைக்கும். அதுபோன்ற எதிர்மறை செயல்கள் ஏற்படும்.
மக்கள் கோ பூஜையை விரும்பி செய்தால் நல்லது.

Comments